×

29 நாட்களில் 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்து சாதனை படைத்தது தமிழகம்: தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 29 நாட்களில் 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்து சாதனை படைத்துள்ளனர். 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை எடுக்கபட்ட கணக்க்கெடுப்பில் 2008-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மாதத்தில் கிடைக்கபெற்ற உடலுறுப்பு தானத்தின் அதிகபட்ச எண்ணிக்கை இது என தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) தெரிவித்துள்ளது. இறந்த நன்கொடையாளர்களுக்கு அரசு மரியாதைகள் இந்த திட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது என சுகாதார செயலாளர் கூறினார்.

இது தொடர்பாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது;
“நாங்கள் 29 நாட்களில் 30 நன்கொடைகளைப் பெற்றுள்ளோம்; ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒன்று வீதம் நன்கொடைகள் பெறபட்டுள்ளது. பல்நோக்கு அணுகுமுறை இதை சாத்தியமாக்கியுள்ளது. மாநிலத்தின் இறந்த நன்கொடையாளர் திட்டத்தின் தனித்தன்மை என்னவென்றால், இது ஒரு நகரத்தை மையமாகக் கொண்டிருக்கவில்லை. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்புடன் மாநிலம் முழுவதும் பரவுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

செப்டம்பர் 23, 2023 அன்று உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தபோது, இந்தத் திட்டத்திற்கு பெரிய ஊக்கம் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், “உறுப்பு தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினருக்கு அரசு மரியாதை அளிக்கும் மாநில அரசின் முக்கிய முடிவுதான் உடல் உறுப்பு தானம் திட்டத்திற்கு ஊக்கமளித்தது என கூறினார்.

தானம் பெறப்பட்ட உடல் உறுப்புகளின் எண்ணிக்கை
சிறுநீரகம் – 48
கல்லீரல் – 27
இதயம் – 10
நுரையீரல் – 13
கண் – 50
தோல் – 10
எலும்பு – 17
இதய வால்வுகள் – 17

The post 29 நாட்களில் 30 பேர் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்து சாதனை படைத்தது தமிழகம்: தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Tamil Nadu Organ Transplant Commission ,Chennai ,Dinakaran ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து